கோலாலம்பூர், மார்ச் 25 – இன மற்றும் மதப் பிரச்சனைகள் தொடர்பான விசாரணைகளை, தாம் தேசிய போலீஸ் படைத் தலைவர் மற்றும் அரச மலேசிய போலீஸ் படையிடமே விட்டு விட்டதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
அது போன்ற விசாரணைகளில் தாம் ஒரு போதும் தலையிட்டது இல்லை எனவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
எப்படி இருந்தாலும், அது போன்ற விவகாரங்களில், விட்டுக் கொடுக்கும் போக்கு கடைப்பிடிக்கப்படக்கூடாது. சட்ட திட்டங்களுக்கு ஏற்ப கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென, பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
“நம்மை போதகர்கள் என இஸ்லாம் குறிப்பிடுகிறது. நாம் தண்டிப்பவர்கள் அல்ல. சட்ட விதிகளை பின்பற்றி தீர்ப்பு வழங்குபவர்களை, நாம் “கடி”அல்லது நீதிபதிகள் என அழைக்கிறோம்” என பிரதமர் குறிப்பிட்டார்.
அதனால், அரசியல் கட்சிகள் உட்பட எந்த ஒரு தரப்பினரும், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டாம்.
பிரச்சனை இருந்தால், விசாரணை செய்யப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், நீதித்துறை தண்டனை விதிக்கும். விதிமுறைகள் தெளிவாக உள்ளது. அதனால் சட்ட திட்டங்களை பின்பற்றி நடக்குமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.