கிள்ளான், பிப் 13 – காப்பார் கம்போங் தோக் மூடாவிலுள்ள செம்பனை தோட்டத்தில் இன்று விபத்துக்குள்ளான மாடல் BK 160 இலகு ரக கேப்ரியல் விமானத்தில் இருந்த விமானியும், துணை விமானியும் மரணம் அடைந்தனர் என நம்பப்படுவதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் தெரிவித்திருக்கிறார். 1,300 கிலோ எடையுள்ள அந்த விமானம் நிலத்தில் 2 மீட்டர் ஆழத்தில் புதையுண்டதால் 30 வயது மதிக்கத்தக்க விமானியும், 40 வயதுடைய துணை விமானியும் இறந்தனர் என நம்பப்படுவதாக அவர் கூறினார். தீயணைப்பு படை, போலீஸ் மற்றும் பொது தற்காப்பு படை உறுப்பினர்களின் உதவியோடு அவ்விருவருரின் உடலை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . அந்த இருவரின் உடல்களும் மீட்கப்பட்ட பின்னர் கிள்ளான் HTAR மருத்துவமனையில் சவப் பரிசேதாதனைக்கு கொண்டுச் செல்லப்படும் என ஹுசைன் தெரிவித்தார்.
இன்று நண்பகல் மணி 1.28 அளவில் சுபாங் சுல்தான் அப்துல் அசிஸ் ஷா விமான நிலையத்திலிருந்து பொழுதுபோக்கிற்காக புறப்பட்ட ஐந்து நிமிடத்திற்குப் பின் அந்த விமானம் தொடர்பை இழந்ததாக கூறப்பட்டது. மேலும் அந்த விமானம் விபத்துக்கு உள்ளாகுவதற்கு முன்னதாக அதன் விமானியிடமிருந்து அவசர அழைப்பு எதனையும் பெறவில்லையென சிவில் விமான போக்குவரத்து வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேப்டன் நோராஸ்மான் மஹ்மூட் தெரிவித்தார்.