யங்கூன், ஏப்ரல் 17 – மியன்மாரின் ஜனநாயக போராட்டவாதியும், அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான ஆங் சான் சூச்சி, சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, அந்நாட்டு ஜுந்தா இராணுவ அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
வெப்பமான வானிலை காரணமாக, ஆங் சான் சூச்சி மட்டுமின்றி, முன்னெச்சரிக்கை உதவி தேவைப்படுபவர்கள், குறிப்பாக வயதான கைதிகளை வெப்பத் தாக்குதலிலிருந்து பாதுகாக்க அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மேஜர் ஜெனரல் ஜாவ் மின் துன் கூறியுள்ளார்.
2021-ஆம் ஆண்டு, இராணுவ புரட்சி வாயிலாக வீழ்த்தப்பட்ட சூச்சி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சாப்பிடுவதற்கு கூட சிரமப்படும் சூச்சியின் நிலை குறித்து, கடந்தாண்டு செப்டம்பரில் அவரது மகன் கிம் அரிஸ் கவலை தெரிவித்திருந்தார்.
சிறைக்கு வெளியே, அவரை நீண்ட காலமாக யாரும் பார்க்கவில்லை, என்பதையும் அரிஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில், சூச்சியையும், மியன்மார் முன்னாள் அதிபர் யு வின் மியின்ட்டையும் வீட்டுக்காவலுக்கு மாற்றியுள்ள, ஜுந்தாவின் முடிவை அந்நாட்டு அரசியல் ஆய்வாளர்களும், பொதுமக்களும் வரவேற்றுள்ளனர்.
1989-ஆம் ஆண்டு தொடங்கி, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தனது வாழ்நாளின் பெரும் பகுதியை, சிறையில் தான் சூச்சி கழித்து வருகிறார்.
ஆகக் கடைசியாக, தேசத் துரோகம் மற்றும் ஊழல் குற்றங்கள் தொடர்பில், அவருக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.