லங்காவி, டிசம்பர் 1 – அண்மையில், வெறும் தண்ணீருக்கு ஐந்து ரிங்கிட்டை செலுத்தியதாக, வாடிக்கையாளர் ஒருவர் புகார் செய்ததை அடுத்து, வைரலாகி கடும் கண்டனத்தை பெற்று வரும், லங்காவியிலுள்ள உணவகம் ஒன்று, இறுதியாக அச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளது.
‘Langkawi Hari Ini’ – LHI எனும் முகநூல் கணக்கில் அந்த விளக்கம் இடம்பெற்றுள்ளது.
அந்த பதிவில், வைரலான சம்பவம் தொடர்பான கட்டண ரசீதும் இணைக்கப்பட்டுள்ளது.
உணவுக்கான விலையை கணக்கிடும் போது, உணவக பணியாளர்களில் ஒருவர், தவறுதலாக தண்ணீருக்கும் கட்டணம் விதித்துவிட்டதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்காக, மன்னிப்புக் கோருவதாகவும், அந்த பதிவு வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடிய விரைவில், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரை தொடர்புக் கொண்டு, கூடுதலாக விதிக்கப்பட்ட கட்டணத்தை திரும்பி தரவும், தமது தரப்பு திட்டமிட்டுள்ளதாக, பதிவிடப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் அந்த உணவகத்தில் ஒரு கப் தண்ணீரின் விலை ஒரு ரிங்கிட் மட்டுமே. எனினும், தங்கள் தவறுக்காக வருந்துவதாகவும், அந்த தவற்றை சுட்டிக்காட்டிய கருத்துகளை வரவேற்பதாகவும், அமைதி காத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி எனவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.