கோலாலம்பூர், ஏப்ரல்-17, கோவிட்-19 பெருந்தொற்றின் போது பணிநீக்கம் செய்யப்பட்ட விமானத் தொழில்நுட்பப் பணியாளர்கள் இருவருக்கு, பணிநீக்க இழப்பீடாக மொத்தம் 110,000 ரிங்கிட்டை வழங்குமாறு ஒரு வணிக விமான நிறுவனத்திற்கு தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவ்வகையில்
Hasrulnizam Nopen-னுக்கு RM 51,391.44 மற்றும் Ahmad Abu Bakar-ருக்கு RM 57,808.90 காசை வழங்க வேண்டும் என AirAsia X Bhd உத்தரவிடப்பட்டது.
31 நாட்களுக்குள் அத்தொகையை வழங்கத் தவறினால், அந்நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 8% வட்டி விதிக்கப்படும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று உச்சத்தில் இருந்த போது விமானங்களின் செயல்பாடுகள் முடங்கியதால், அவ்விருவரும் முறையே 2020 ஜூன் மாதமும், 2021 ஜனவரி மாதமும் வேலை இழந்தனர்.
எனினும் இருவரது அடிப்படை மாதச் சம்பளமும், அலவன்ஸ் தொகையும் ஐயாயிரம் ரிங்கிட்டுக்கு மேல் என்பதால், வேலை நிறுத்தச் சலுகைத் தொகையைத் தர அந்நிறுவனம் மறுத்து விட்டது.
1980-ஆம் ஆண்டு வேலை நிறுத்தச் சலுகை விதிகளின் படி, மாதச் சம்பளம் இரண்டாயிரம் ரிங்கிட் மற்றும் அதற்குக் கீழ் இருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்பதை AirAsia X அப்போது சுட்டிக் காட்டியிருந்தது.
இதையடுத்து 2022-ல் அவ்விவகாரம் தொழிலாளர் நீதிமன்றம் சென்றது.
விமானம் ஓடுகிறதோ இல்லையோ, தொழில்நுட்பப் பணியாளர்கள் என வரும் போது, விமானப் பராமரிப்பிலும் அவர்கள் ஈடுபடுவதால் வேலை நிறுத்தத்திற்கான இழப்பீட்டுச் சலுகைக்கு அவர்கள் தகுதியானவர்களே என அவர்களின் வழக்கறிஞர் வாதாடி, இன்று தனது கட்சிக்காரர்களுக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்றுத் தந்துள்ளார்.
தொழிலாளர் நீதிமன்றத்தின் அவ்வுத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் AirAsia X மேமுறையீடு செய்துள்ளது.