
செத்தாபாக், ஆகஸ்ட் 20 – Danau Kota இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த 14 வயது Keziah Nisha எனும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டசம்பவம் தொடர்பில், அவர் பள்ளியில் பகடிவதைக்கு ஆளாகி வந்ததாகவும், இதுகுறித்து குடும்பத்தினர் முன்பே பள்ளியிடம் புகார் அளித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Keziah-வின் மாமா மணி கூறுகையில், இந்தப் பகடிவதை பிரச்சினை கடந்த பிப்ரவரி மாதம் முதலே இருந்து வந்ததாக குடும்பத்தினர் அறிந்திருந்ததாகத் தெரிவித்தார். மாணவி தாம் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, பெற்றோர் பள்ளிக்குச் சென்று முறையிட்டுள்ளனர்.
Keziah-வின் இறுதிச்சடங்கு நேற்று, ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இந்த மரணம் குறித்து போலிசிடம் புகார் அளித்துள்ள குடும்பத்தினர், பள்ளியில் கொடுத்த புகாருக்கு பள்ளி தரப்பில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து, அவர் முன்பே தெரிவித்த பகடிவதை குறித்த புகார்கள் எவ்வாறு கையாளப்பட்டன, பள்ளி மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டனர் என்பதற்கு தெளிவான பதில் வேண்டும் என குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
Keziah-வின் மரணத்திற்கு பள்ளியில் நடந்த பகடிவதை காரணமா என்பது இன்னும்
போலிஸ் விசாரணையில் உள்ள நிலையில், இன்று மாலை 5 மணியளவில் கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசாருமான அமிருடின் ஷாரி இன்று Keziah-வின் குடும்பத்தினரைச் சந்திக்கவுள்ளார்.



