கோலாலம்பூர், மார்ச் 7 – மத்திய அரசாங்கத்தின் கடன் அளவு கடந்தாண்டு 8.6 விழுக்காடாக பதிவுச் செய்யப்பட்டது.
அந்த விகிதம், அதற்கு முந்தைய 2022-ஆம் ஆண்டு பதிவுச் செய்யப்பட்ட 10.2 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.
2023-ஆம் ஆண்டு, மத்திய அரசாங்கத்தின் மொத்தக் கடன், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 250 கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 64.3 விழுக்காடாக பதிவாகி இருந்த வேளை ;
2022-ஆம் ஆண்டு அது ஒரு லட்சத்து ஏழாயிரத்து 960 கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60.3 விழுக்காடாக பதிவானது.
அந்த குறைந்த கடன் அதிகரிப்பு விகிதம், அரசாங்கத்தின் நிதி ஒருகிணைப்பு நடவடிக்கைகளின் விளைவாகும்.
அதன் காரணமாகவே, 2022-ஆம் ஆண்டு ஒன்பதாயிரத்து 950 கோடியாக பதிவான மத்திய அரசாங்கத்தின் நிதி பற்றாக்குறையை, கடந்தாண்டு ஒன்பதாயிரத்து 140 கோடியாக குறைக்க முடிந்தது.
அதே சமயம், 2023-ஆம் ஆண்டு மத்திய அரசாங்கத்தின் கடன் என்பது, ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 270 கோடி அல்லது 97.5 விழுக்காட்டு உள்நாட்டு கடன் மற்றும் ஈராயிரத்து 980 கோடி அல்லது 2.5 விழுக்காடு வெளிக்கடனும் ஆகும்.
மக்களவைக்கு வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனை தெரிவித்தார்.
அரசாங்கத்தின் மொத்த கடன், பங்கு பத்திரங்கள், புதிய கடன் குறித்து பாகோ நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.