புக்கிட் மெர்தாஜாம், பிப்ரவரி 9 – அண்மையில், பினாங்கு பாலத்தில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியதால் வைரலான தம்பதிக்கு, தலா ஈராயிரத்து 500 ரிங்கிட் அபராதம் விதித்து, பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் அவர்கள் ஆறு மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
50 வயது முஹமட் ஹபீஸ் ஓங் அப்துல்லாவும், அவரது 37 வயது மனைவி ஓங் செர் யிங்கும் தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து அவர்களுக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னதாக, இம்மாதம் ஐந்தாம் தேதி, மாலை மணி ஐந்து வாக்கில், பினாங்கு பாலத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அந்த தம்பதி, இதர இரு மோட்டார் சைக்கிளோட்டிகளை எட்டி உதைத்ததோடு, கயிறை கொண்டு இதர வாகனமோட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.