சுங்கை பூலோ, மார்ச் 31 – நோன்புப் பெருநாளை ஒட்டி பாயா ஜாராஸ், ஷா ஆலாம் மாநகர மன்ற மண்டபத்தில் நடைபெற்ற கூட்டுறவு மற்றும் தொழில்முனைவர் மடானி சிறப்பு விற்னையில் (JKMU), சமயலறைப் பொருட்கள் மற்றும் ஹரி ராயாவுக்கு தேவையானப் பொருட்கள் 50% கழிவுச் சலுகை விலையில் விற்கப்பட்டு பொது மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.
மக்களின் வாழ்க்கைச் செலவினம் குறிப்பாக நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வரும் முஸ்லீம்களிள் சுமையைக் குறைக்கும் வகையில் அந்த மாபெரும் மலிவு விற்பனை நடைபெற்றது.
இதன் வழி நாட்டிலேயே மிக மலிவான JKMU விற்பனை என அது பெயர் பெற்றதாக தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ R. ரமணன் கூறினார்.
இந்த JMKU மலிவு விற்பனையில் பங்கெடுத்த 12 கூட்டுறவு நடத்துநர்களின் ஒத்துழைப்புடன் 30% தொடக்கம் விலைக் கழிவு வழங்கப்பட்டது.
ஆனால், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் டத்தோ ரமணன் Happy Hour விற்பனையின் போது தனது சொந்த செலவில் கூடுதலாக 20% விலைக் கழிவை வழங்கி, மொத்தமாக 50% விலைக் கழிவை மக்கள் பெற வகைச் செய்தார்.
கோழி, முட்டை, பெருநாள் பலகாரங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், காய்கறிகள், துணிமணிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அங்கு விற்கப்பட்டன.
இந்த மடானி மாபெரும் மலிவு விலை விற்பனை சுங்கை பூலோ மக்களுக்காக இவ்வாண்டு நெடுகிலும் அவ்வப்போது நடத்தப்பட்டு வரும் என்ற மகிழ்ச்சி செய்தியையும் ரமணன் தெரிவித்தார்.
அதுவும் தனது சொந்த உதவித் தொகையில் அந்த மக்களுக்கு அந்த மலிவு விற்பனைத் தொடரும் என்றார் அவர்.
இவ்வேளையில், இவ்வாண்டு இதுவரை 12 நாடாளுமன்றத் தொகுதிகளில் 13 JMKU மலிவு விற்பனைகள் நடத்தப்பட்டு, மொத்தமாக 11 லட்சம் ரிங்கிட்டுக்கு விற்பறை நடைபெற்றதாகவும் துணை அமைச்சர் சொன்னார்.