Latestமலேசியா

இந்திய இளையோர் மத்தியில் பங்கு முதலீட்டு அறிவை வளர்க்கும் முயற்சியில் மித்ரா

பட்டவொர்த், மே-18 – மலேசிய இந்தியர்களில் சுமார் 3 விழுக்காட்டினர் மட்டுமே பங்கு முதலீடு உள்ளிட்ட முதலீடுகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இது மிகவும் குறைவான எண்ணிக்கையாகும்; அதனை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் தலைவர் பி. பிரபாகரன் கூறினார்.

முதலீட்டு உலகம் மோசடிகள் நிறைந்தது என்ற எதிர்மறையான கண்ணோட்டம், மோசம் போன அனுபவம் போன்ற காரணங்களால் இந்தியச் சமூகம் குறிப்பாக இளையோர் முதலீடு பக்கமே வரத் தயங்குகின்றனர்.

அதைப் போக்கும் வகையிலேயே MIIP என்ற பெயரில் மலேசிய இந்தியர் முதலீட்டுத் திட்டத்தை மித்ரா அறிமுகப்படுத்தியுள்ளது.

மலேசியப் பங்குச் சந்தையின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும் அந்நிகழ்வு, பங்கு முதலீடு உள்ளிட்ட முதலீட்டுத் திட்டங்களில் இந்தியர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும்.

அதில் உரிய வழிகாட்டுதல்களும் பயிற்சிகளும் வழங்கப்படுவதாக, பினாங்கு பட்டவொர்த்தில் வட மண்டல அளவிலான அத்திட்டத்தைத் தொடக்கி வைத்து பேசிய போது பிரபாகரன் சொன்னார்.

அந்நிகழ்வில் மித்ரா தலைமை இயக்குநர் ஜி. பிரபாகரனும் கலந்துகொண்டார்.

இப்பயிற்சியில் பங்கேற்பதன் மூலம் இந்திய இளையோரும் பங்கு முதலீடு தொடர்பான யுக்திகளைக் கற்றறிவதோடு தத்தம் நிதி நோக்கங்களுக்கு ஏற்ற வியூகங்களை வகுத்துக் கொள்ள முடியுமென்றார் அவர்.

மத்திய மண்டலம் (கோலாலம்பூர்), வட மண்டலம் (பினாங்கு), மற்றும் தென் மண்டலம் (ஜோகூர்) வாரியாக நடத்தப்படும் இந்நிகழ்வில் பங்கேற்போருக்கு, நிதி முதலீட்டுத் துறையில் வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

இணையம் வாயிலான பங்கு முதலீடு, பங்குச் சந்தை பகுப்பாய்வு, விவேகமான முதலீட்டு யுக்தி உள்ளிட்ட அம்சங்களுக்கு பயிற்சிகளில் முக்கியத்துவம் வழங்கப்படும்.

இதனிடையே ‘Karnival Saham MITRA’ என்ற நிகழ்வு அடுத்த மாதம் கெடா, சுங்கை பட்டாணியில் நடைபெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பங்கு முதலீடு தொடர்பான விஷயங்களை இந்தியர்கள் இலவசமாகத் தெரிந்துகொள்ளும் களமாகவும், தெக்குன் நேஷனல் உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் ஓரிட சேவை மையமாகவும் அந்நிகழ்வு விளங்குமென்றார் அவர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!