Latestமலேசியா

உயர் மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்பில் துன் டாய்ம் & குடும்பத்தார் மீது 8 புதிய விசாரணை அறிக்கைகள் திறப்பு

புத்ராஜெயா, மே-23 – மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் சைனுடின், அவரின் குடும்பத்தார் மற்றும் ஒரு உறவினருக்கெதிராக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, 8 புதிய விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளது.

MACC-யிடம் அறிவிக்கப்படாத ‘உயர் மதிப்புள்ள’ சொத்துக்கள் குறித்து வெளிநாடுகளிலிருந்து புதியத் துப்பு கிடைத்துள்ளதே அதற்குக் காரணம் என, MACC தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி கூறினார்.

2023-ல் தொடங்கிய விசாரணையின் பலனாக இப்புதியத் தகவல் பெறப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், சொத்துகளை அறிவிக்கத் தவறுவது சட்டப்படி குற்றமாகும் என்பதை நினைவுறுத்தினார்.

டாய்ம் கடந்தாண்டு நவம்பரில் காலமானாலும், சம்பந்தப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்ய MACC பரிந்துரை செய்யுமென்றார்.

39 நிறுவனங்கள், 19 நிலங்கள், 6 சொத்துடைமைகளில் தனக்குள்ள உரிமையை அறிவிக்கத் தவறியதாகக் கூறி கடந்தாண்டு ஜனவரியில் டாய்ம் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

அமானா சாஹாம் நேஷனல் பங்குரிமைகள் மற்றும் 7 சொகுசுக் கார்கள் குறித்த விவரங்களையும் அவர் அறிவிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.

அவரின் மனைவியும் அதே போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார்.

எனினும் நவம்பர் 13-ல் டாய்ம் காலமானதும், அரசு தரப்பு குற்றச்சாட்டுகளை மீட்டுக் கொள்ள, நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!