
சிரம்பான், மே-29 – சிரம்பான், துவாங்கு ஜாஃபார் மருத்துவமனை வளாகத்தில் காட்டுக் குரங்குகளுக்கு உணவளிக்க வேண்டாமென பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
மனிதர்களுக்கும் வனவிலங்களுக்கும் இடையிலான மோதல்களைத் தவிர்க்க இது அவசியமென, வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான Perhilitan கூறியது.
குரங்குகளுக்கு உணவளிக்கும் செயலானது அவற்றின் இயற்கை குணத்தை மாற்றி, தைரியமாகவும் மனிதர்களுக்கு எதிராக ஆக்ரோஷமாகவும் நடந்துகொள்ள தூண்டுவதாக, அத்துறையின் நெகிரி மாநில கிளையின் இயக்குநர் ஃபைசால் இசாம் தெரிவித்தார்.
உணவளிக்கப்படுவதுடன் பழக்கப்பட்டு விட்ட குரங்குகள், பின்னர் அப்பகுதியில் வருவோர் போவோரின் பிளாஸ்டிகளையும், உணவுகளையும் பறிக்க முற்படும்; இதனால் மருத்துவமனை வருகையாளர்களுக்குத் தான் பிரச்னை என்றார் அவர்.
வருகையாளர்கள் மட்டுமின்றி மருத்துவமனை வளாகத்திலும் பாதுகாப்பு ஆபத்துகளை இது ஏற்படுத்துவதாக அவர் சொன்னார்.
2019 முதல் 2024 வரை துவாங்கு ஜாஃபார் மருத்துவமனை, IMU மருத்துவக் கழகம் மற்றும் மருத்துவ உதவியாளர் கல்லூரி தங்குமிடம் உள்ளிட்ட இடங்களில் காட்டுக் குரங்குகளின் அட்டகாசம் இருந்ததாகக் கூறி இதுவரை 9 புகார்கள் பெறப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.