
புத்ராஜெயா, ஜூன்-18 – இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் ஈரானில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு மலேசியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈரானில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது; எந்தவொரு முன்னெச்சரிக்கையும் இல்லாமல் நிலைமை மேலும் மோசமாகலாம் என்பதால், வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அவ்வாறு கேட்டுக் கொண்டது.
தற்போது வரை தலைநகர் தெஹ்ரானில் உள்ள மலேசிய தூதரகத்தில் பதிந்துகொண்டுள்ள மலேசியர்கள் பாதுகாப்புடன் உள்ளனர்.
இருந்தாலும், நேரம் கடத்தாமல் உடனடியாக அந்நாட்டிலிருந்து வெளியேற அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் நாடு திரும்புவதற்கான உரிய தூகரக உதவிகள் வழங்கப்படும்; மலேசியர்களின் பாதுகாப்பும் நலனும் முக்கியம் என விஸ்மா புத்ரா கூறியது.
ஈரானினில் இருக்கும் மலேசியர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் தொடர்புகொள்ள ஏதுவாக, அமைச்சு நடவடிக்கை அறையையும் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. பதிலுக்கு ஈரானும் ஏவுகணைகளை வீசி தாக்க ‘போர்’ மோசமடைந்துள்ளது.
ஈரானில் இதுவரை 224 பேரும் இஸ்ரேலில் 24 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பொது மக்களாவர்.