
கோலாலம்பூர், ஜூன்-23 – ஆபத்தான முறையில் வாகனமோட்டியதோடு, மற்ற சாலைப் பயனர்களிடம் அடாவடியாக நடந்துகொண்ட விரைவுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் வைரலாகியுள்ளார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனத்தின் பெர்மிட்டை, தரைப் பொது போக்குவரத்து நிறுவனமான APAD தற்காலிகமாக இரத்துச் செய்துள்ளது.
அந்த ஓட்டுநரின் செயலைக் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய APAD, ஜூலை 3 முதல் 30 நாட்களுக்கு நிறுவனத்தின் பெர்மிட்டை தற்காலிகமாகவும், பின்னர் ஆகஸ்ட் 7 முதல் நிரந்தரமாகவும் இரத்துச் செய்வதாக அறிவித்தது.
தற்காலிக இரத்து காலம் முழுவதும் எந்தவொரு வாகனத்தையும் கொண்டு சேவை வழங்க அந்நிறுவனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் எந்தவொரு நிறுவனத்திடமும் அனுசரனைப் போக்கு கடைப்பிடிக்கப்படாது என, இன்று வெளியிட்ட அறிக்கையில் APAD திட்டவட்டமாகக் கூறியது.
மற்ற சாலைப் பயனர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், அவ்வாடவர் பேருந்தை ஓட்டிச் சென்ற வீடியோ முன்னதாக வைரலாகி, மக்களின் கண்டனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.