
பாப்பார், ஜூன்-24,சபா, பாப்பாரில் உணவக நடத்துநரின் பெயரை தவறுதலாக கடுமையானத் தொனியில் கூப்பிட்ட சம்பவம், இரு ஆடவர் கும்பல்களுக்கு இடையே பெரும் சண்டையில் போய் முடிந்துள்ளது.
சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு நடந்த சம்பவத்தில், சந்தேக நபர்களில் ஒருவர் கடை உரிமையாளரை அவ்வாறு கடும் தொனியில் அழைத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் இரு கும்பல்களுக்கு இடையிலான சண்டையாக அது மாறி, ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர்.
அதோடு, உணவக நாற்காலிகளும் கட்டைகளும் ‘பறந்தன’.
நிலைமை கைமீறி போகவே, அங்கிருந்த பொது மக்கள் தலையிட்டு அவர்களை விலக்கி விட்டனர்.
சம்பவ வீடியோ வைரலான நிலையில், 19 முதல் 50 வயதிலான 9 சந்தேக நபர்கள் பின்னர் போலீஸிடம் சரணடைந்தனர்.
இதையடுத்து, பொது இடத்தில் சண்டையிட்டது மற்றும் கலவரத்தில் ஈடுபட்டத்தன் பேரில் அவர்கள் மீது விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது.