
மலாக்காவில் கோர விபத்திற்கு வித்திட்ட கார் ஓட்டுனரின் ‘Microsleep’; சாலை விபத்தில் ஆடவர் பலியான பரிதாபம
மலாக்கா, பிப்ரவரி 11 –
மாற்றுத் திறனாளியான (OKU) தனது குழந்தையைப் பள்ளியிலிருந்து அழைத்து செல்லச் சென்ற ஆடவர் ஒருவர், நேற்று மதியம் மலாக்கா Padang Jambu பகுதியில், நிகழ்ந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அங்குள்ள போக்குவரத்து சிக்னலில் அவர் நின்றுக் கொண்டிருந்தபோது , அவர் ஓட்டிச் சென்ற ஹோண்டா EX5 மோட்டார் சைக்கிள், பெரொடுவா மைவி காரால் மோதப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் உட்பட மொத்தம் ஆறு வாகனங்கள் பாதிக்கப்பட்டன என்றும் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அறியப்படுகின்றது.
போலீசார் தெரிவித்ததன்படி, பண்டார் மலாக்காவிலிருந்து புக்கிட் பெருவாங் நோக்கி சென்றுகொண்டிருந்த 35 வயது கார் ஓட்டுனருக்கு ‘Microsleep’ எனப்படும் குறுகிய நேர தூக்கம் ஏற்பட்டதன் காரணமாக அவர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
அதன் விளைவாக, அந்த கார் எதிர்திசை வழியாக சென்று, போக்குவரத்து விளக்கில் நின்றிருந்த வாகனங்களை மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது..
தலை, முகம் மற்றும் உடலில் ஏற்பட்ட கடுமையான காயங்களால், தாமான் மெர்டேக்கா பகுதியைச் சேர்ந்த அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
போலீசார் மேற்கொண்ட பரிசோதனையில் கார் ஓட்டுநர் மதுபானம் மற்றும் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டாலும் அவரது ரத்த மாதிரி மலாக்கா இரசாயனத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பான 41 விநாடிகள் கொண்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



