
புத்ராஜெயா, மார்ச்-11-இனம் – மதம் – ஆட்சியாளர்கள் எனப்படும் 3R பிரச்னைகளில் கடுமையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளது.
நடப்புச் சட்டங்களில் திருத்தம் செய்வது அல்லது புதிய சட்டத்தை இயற்றுவதும் அவற்றிலடங்கும் என, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
3R நிந்தனை சம்பந்தப்பட்ட அண்மையச் சம்பவங்கள் குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட போது, அம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
சில தரப்பினர் சட்டத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல் தொடர்ந்து இன-மத சினமூட்டல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, சட்டத்தில் ஓட்டை உண்டா என்பதை கண்டறிந்து அவற்றை சரிசெய்திட அமைச்சரவை உத்தரவிட்டிருப்பதாக ஃபாஹ்மி சொன்னார்.
இன-மத உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு வேடிக்கைப் பார்க்கும் தரப்பினர் குறித்து அமைச்சரவையில் பேசப்போவதாக, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் முன்னதாகக் கூறியிருந்த நிலையில், அமைச்சரவை இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளது.



