
புத்ரா ஜெயா, மார்ச் 17 – தற்போதைய உலக அரசியல் மோதல்களின் தாக்கத்தை எதிர்கொண்டு, அரசாங்கத்தின் செயல்பாடுகள் தொடர்வதை உறுதி செய்வதற்காக அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் ஆலோசனையில் , தற்போதைக்கு கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் சேர்க்கப்படவில்லை.
இவ்விரு துறைகளும் முன்களப் பணிகளில் சம்பந்தப்பட்டிருப்பதே இதற்கான காரணம் என இன்று அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அரசாங்க செய்தி தொடர்பாளர் பாமி பாட்சில் ( Fahmi Fadzil) கூறினார்.
அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்காரிடமிருந்து அந்த ஆலோசனை குறித்த தொடக்கக்கட்ட அறிக்கை இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்பட்டது.
நோன்பு பெருநாள் கொண்டாட்டத்திற்குப் பிறகு நடைபெறவிருக்கும் தேசியப் பொருளாதார நடவடிக்கைக் குழு கூட்டத்தில் முடிவெடுப்பதற்காக, இது தொடர்பான பல விவகாரங்களை சமர்ப்பிக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டதாக தொடர்பு அமைச்சருமான பாமி பாட்சில் தெரிவித்தார்.



