
கோலாலம்பூர், ஏப்ரல்-28-மலேசியாகினி (Malaysiakini) ஊடகத்தின் மூத்த செய்தியாளர் ஒருவரின் இல்லத்தில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
நேற்று மதியம், சிலாங்கூர் ஸ்ரீ செர்டாங்கில் உள்ள செய்தியாளர் பி. நந்தகுமாரின் வீட்டுக்குச் சென்ற இரு போலீஸார், சுமார் 45 நிமிடங்கள் சோதனையில் ஈடுபட்டதை, மலேசியாகினி உறுதிப்படுத்தியது.
வெளிநாட்டுத் தொழிலாளர் ஆட்சேர்ப்பு முறை குறித்த கட்டுரை தொடர்பாக இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
அமைச்சரவையின் இரகசிய ஆவணங்கள் அங்கு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், சோதனையில் எந்தப் பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை.
சாட்சி என்ற அடிப்படையில் நந்தகுமாரிடம் போலீஸார் வாக்குமூலம் பதிவுச் செய்திருப்பதாகவும் தெரிகிறது.
இதே விவகாரம் தொடர்பில், மலேசியாகினி நிறுவனரும் இயக்குநருமான Pramesh Chandran-னிடம் கடந்த வாரம் வாக்குமூலம் பதிவாகியுள்ளது.
இந்த நடவடிக்கையை “ஊடகவியலாளர்களை மிரட்டும் செயல்” என மலேசியாகினி நிர்வாகம் கண்டித்துள்ளது.
இதற்கிடையில், மலேசிய தேசிய பத்திரிகையாளர் சங்கமான NUJM, இத்தகைய செயல்கள் ஊடக சுதந்திரத்தை சீர்குலைக்கும் என்று எச்சரித்துள்ளது.
இது குறித்து மனிதவள அமைச்சு அளித்த புகாரின் பேரில் விசாரணை தொடருகிறது.
செய்தியாளர்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க அரசாங்கம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



