
புத்ராஜெயா, மே-8-வெளிநாடுகளில் பணிபுரிந்து அல்லது கல்வி பயின்று தாயகம் திரும்பும் மலேசியர்களுக்கு ஒரு நற்செய்தி.
வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல், செல்லுபடியாகும் வெளிநாட்டு ஓட்டுநர் உரிமங்களை மலேசிய ஓட்டுநர் உரிமமாக எளிதில் மாற்றிக்கொள்ளலாம் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் பெறப்பட்ட முறையான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் மலேசியர்கள், மீண்டும் முழுமையான ஓட்டுநர் தேர்வை எழுத வேண்டிய அவசியம் இல்லை.
சாலைப் போக்குவரத்துத் துறையின் (JPJ) இந்த நடவடிக்கை, வெளிநாடுகளில் நீண்ட காலம் வசித்துவிட்டுத் திரும்பும் ஆயிரக்கணக்கானோருக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆவணங்களைச் சமர்ப்பித்து, உரிய கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம் இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.
அரசாங்கச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் மற்றும் தேவையற்ற நடைமுறைச் சிக்கல்களைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இருப்பினும், வாகனத்தின் வகை மற்றும் வெளிநாட்டு உரிமத்தின் தற்போதைய நிலையைப் பொறுத்து சில நிபந்தனைகள் விதிக்கப்படும்.
இந்த வசதியைப் பயன்படுத்த விரும்புவோர், தேவையான ஆவணங்கள் மற்றும் தகுதியான நாடுகளின் பட்டியலைத் தெரிந்துகொள்ள JPJ-வின் அதிகாரப்பூர்வ இணையத் தளத்தை வலம் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



