
ஜோகூர் பாரு, மே-11– ஜோகூர் பாருவின் புக்கிட் இண்டா பகுதியில் உள்ள வீடுகளின் மீது தொடர்ந்து இரண்டு நாட்கள் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தையடுத்து, அங்கு வசிக்கும் நான்கு குடும்பங்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இந்த தாக்குதல், சிங்கப்பூரைச் சேர்ந்த ‘ஆ லோங்’ கடன் கும்பலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என பெர்லிங் சட்டமன்ற உறுப்பினர் லியூ சின் தொங் (Liew Chin Tong) தெரிவித்துள்ளார்.
ஒரு வீட்டை குறிவைத்து வீசப்பட்ட பெட்ரோல் குண்டின் தீ, அண்டை வீட்டுகளுக்கும் பரவி சேதத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
அடுத்த நாளும் இதேபோன்ற தாக்குதல் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் வீடுகளின் முன்பகுதியும் பல வாகனங்களும் தீக்கிரையாகின. இதனையடுத்து, அப்பகுதி மக்கள் தன்னார்வ பாதுகாப்புக் குழுவை அமைத்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.



