
பாங்கி, மே-12-மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் நோக்கில், ‘Who Wants To Be A Scientist? 2026’ தேசிய அளவிலான அறிவியல் போட்டி மீண்டும் களம் கண்டுள்ளது.
மலேசியத் தேசியப் பல்கலைக்கழகமான UKM-மின் இந்திய மாணவர் பிரதிநிதித்துவக் குழு மற்றும் நாட்டின் முதல் நிலை மின்னியல் ஊடகமான வணக்கம் மலேசியா கூட்டு ஏற்பாட்டில் இப்போட்டி நடைபெறுகிறது.
வரும் மே 23-ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் சுற்றில், நாடு முழுவதிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 850-க்கும் மேற்பட்ட ஐந்தாம் மற்றும் ஆறாம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
பாடநெறிச் செயல்பாடுகளுக்கான புள்ளிகள் வழங்கப்படாத நிலையிலும், தங்களின் பிள்ளைகளை வருங்கால STEM உலகிற்குத் தயார்படுத்த வேண்டும் என்ற பெற்றோர்களின் ஆர்வத்தால் இவ்வாண்டு மாணவர் வருகை அபரிமிதமாக உள்ளது.
முதல் சுற்று AI தொழில்நுட்பம் கொண்ட செயலி வாயிலாக இணையத்தில் நடைபெறும்.
இதிலிருந்து தேர்வுச் செய்யப்படும் 90 மாணவர்கள் அரையிறுதிக்கும், இறுதிச் சுற்றிற்கும் தகுதி பெறுவர்.
இப்போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றுகள் ஜூலை 25-ஆம் தேதி UKM பல்கலைக்கழகத்தில் நேரடியாக நடைபெறவுள்ளன.
பல்கலைக்கழகப் பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்ட இருமொழி வினாக்கள் மற்றும் IEEE போன்ற அனைத்துலக அமைப்புகளின் பங்களிப்பு இப்போட்டியின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது.



