
சென்னை, மே-18-தமிழ் திரைப்பட உலகின் மூத்த தயாரிப்பாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் விளங்கிய கே. ராஜன் சென்னையில் தற்கொலை செய்து கொண்ட தகவல், ஒட்டுமொத்த திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவருக்கு வயது 85.
சென்னையில் உள்ள அடையாறு ஆற்றில் நேற்று மாலை அவர் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
தகவல் தெரிந்து ராஜனின் உடலை மீட்ட தீயணைப்பு-மீட்புத் துறை, சவப்பரிசோதனைக்காக உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.
இவரின் தற்கொலை குறித்து போலீஸார் வழக்குப் பதிவுச் செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
1980-களின் தொடக்கத்தில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, ‘நம்ம ஊரு நல்ல ஊரு’, ‘பிரம்மச்சாரி’ போன்ற பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் கே. ராஜன்.
திரைப்பட தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், சினிமா தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் உரிமைகளுக்காகத் திரையுலக மேடைகளில் எப்போதும் துணிச்சலோடும், வெளிப்படையாகவும் குரல் கொடுத்து வந்த ஆளுமையாக அவர் மதிக்கப்பட்டார்.
குறிப்பாக உச்ச நடிகர்கள் தங்களின் சம்பளத்தைக் குறைத்துகொள்ள வேண்டும், சிறிய பட்ஜெட் படங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை போன்ற இவரின் பேச்சுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சர்ச்சையானதும் உண்டு.
இந்நிலையில், 85 வயதில் கே. ராஜனின் எதிர்பாராத முடிவால் அதிர்ச்சியடைந்துள்ள திரையுலகினர், நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.



