
புத்ராஜெயா, ஜூன்-12-ஜோகூர் – நெகிரி செம்பிலான் ஆகிய இரு மாநிலச் சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையமான SPR அங்குத் தனித்தனியாகத் தேர்தல்களை நடத்த முடிவுச் செய்துள்ளது.
அவ்வகையில், ஜோகூர் சட்டமன்றத்திற்கு வரும் ஜூலை 11-ஆம் தேதி தேர்தல் நடக்கிறது; நெகிரி செம்பிலான் சட்டமன்றத்திற்கு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வாக்களிப்பு நடைபெறும் என, சற்று முன்னர் SPR அறிவித்தது.
எதற்காக தேர்தல்கள் தனித்தனியாக நடத்தப்படுகின்றன என்பதை அவ்வாணையம் விளக்கவில்லை.
56 தொகுதிகளைக் கொண்ட ஜோகூர் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் ஜூன் 27-ஆம் தேதியும், முன்கூட்டிய வாக்குப்பதிவு ஜூலை 7-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
அதே சமயம், 36 தொகுதிகளைக் கொண்ட நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 18-ஆம் தேதியும், முன்கூட்டிய வாக்களிப்பு ஜூலை 28-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இம்மாதத் தொடக்கத்தில் அவ்விரு மாநில சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டதை அடுத்து, அங்கு இந்தத் தேர்தல்கள் நடைபெறுகின்றன.



