
மலாக்கா, ஜூன்-28-உலகமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால், உலகம் ஒரு கிராமமாக மாறியுள்ள போதிலும், சகிப்புத்தன்மையும் பரஸ்பர புரிதலும் இன்னும் சவாலாகவே உள்ளதாக, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் தெரிவித்துள்ளார்.
மலாக்காவில் நடைபெற்ற 2-ஆவது அனைத்துலக சமயங்களுக்கு இடையிலான அமைதி மற்றும் நல்லிணக்க ஆய்வரங்கை தொடக்கி வைத்து உரையாற்றிய அவர், சமூக அமைதியை நிலைநிறுத்துவது என்பது ஒரு கூட்டுப் பொறுப்பு என் வலியுறுத்தினார்.
இன, சமய, மற்றும் கருத்தியல் வேறுபாடுகள் தவறாகப் பயன்படுத்தப்படும் போது நாட்டின் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், மலேசியாவின் பன்முகத்தன்மை நாட்டின் பலவீனமல்ல, மாறாக அது ஒரு வியூக சொத்து எனக் குறிப்பிட்டார்.
உண்மைக்குப் புறம்பான தகவல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் அச்சுறுத்தல்களைத் தவிர்க்க, தற்கால சமுதாயத்திற்கு முதிர்ச்சியும் விவேகமும் அவசியம் என்றார் அவர்.
மேலும், 13-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களும், ருக்குன் நெகாராவும் நாட்டின் ஒற்றுமைக்கான முக்கிய வழிகாட்டிகளாக விளங்குவதாகவும் டத்தோ ஆரோன் சொன்னார்.
மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சமயத் தலைவர்கள், அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் என சுமார் 250 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.



