
சிரம்பான், ஜுன்-30-மலேசியாவில் சுமார் 25,000 உள்நாட்டுப் பணியாளர்கள் பயனடையும் வகையில் புதிய ‘பாக்காட் மடானி’ (Bakat Madani) திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் நேற்று சிரம்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், நாட்டின் திறமையாளர்களை மேம்படுத்துவதையும், உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அரசாங்கத்தை மட்டுமே நம்பியிருக்காமல், அரசாங்கத்துடன் தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்கள் (GLICs), அரசாங்க நிறுவனங்கள் (GLCs) மற்றும் பெட்ரோனாஸ் ஆகியவற்றின் முழுமையான தனியார் நிதிப் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
3 முக்கிய அம்சங்களின் கீழ் இது இயங்கும்:
அதாவது, அரசாங்க மற்றும் முதலீட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை உறுதிச் செய்தல், _semiconductors_ புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற அதிநவீன துறைகளில் இளைஞர்களை ஈடுபடுத்துதல், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வியான TVET நிறுவனங்களை நவீனமயமாக்குதல் ஆகியவையே அவையாகும்.
இவ்வேளையில், இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அதிகப்படியான உதவித்தொகை வழங்கப்படுவதோடு, இதில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு சிறப்பு வரி சலுகைகளும் வழங்கப்படும் என, அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.



