
கோலாலம்பூர், ஜூலை-5-உணவகங்களில் இலவச குடிநீரை கட்டாயமாக வழங்கும் பரிந்துரை, சீனி கலந்த பானங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியாக வரவேற்கப்பட்டாலும், அதன் நடைமுறை சாத்தியம் மற்றும் நீண்டகால விளைவுகள் குறித்து நிபுணர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
மலாயா பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார நிபுணர் பேராசிரியர் டாக்டர் விக்டர் ஹோ, சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறும் குழாய் நீர் பாதுகாப்பானதே என்றாலும், கட்டடங்களின் குழாய் அமைப்பு மற்றும் நீர் சேமிப்பு தொட்டிகள் காரணமாக அதன் தரம் பாதிக்கப்படலாம் என்றார்.
மேலும், இலவசமாக நீர் வழங்கப்படும்போது, அதை சிக்கனமாக பயன்படுத்தும் மனப்பான்மை குறையக்கூடும் என்றும், இதனால் நீர் வளங்கள் வீணாகும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
இதனிடையே, இந்த யோசனை நல்ல நோக்கத்துடன் இருந்தாலும், உணவகங்கள் கூடுதல் செலவை ஏற்க வேண்டியதுடன், பான விற்பனை வருமானத்தையும் இழக்க நேரிடும் என்பதால், இது வணிகங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சமமான பலனை வழங்கும் தீர்வாக இல்லை என, முழுமையான சுகாதாரத்திற்கான நிபுணர் டத்தோ Dr எம். ராஜன் தெரிவித்துள்ளார்.



