
வியட்நாம், ஜூலை 30 – வியட்நாமில் முதல் முறையாக, மூளைச்சாவு அடைந்த தானதாரரிடமிருந்து பெறப்பட்ட ஆணுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை 43 வயது ஆண் ஒருவருக்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மருத்துவக் காரணங்களால் அந்நபரின் ஆணுறுப்பின் ஒரு பகுதி அகற்றப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, மருத்துவம், நோய் எதிர்ப்பு மற்றும் உளவியல் மதிப்பீடுகளுக்குப் பிறகு இந்த அறுவைச் சிகிச்சைக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.
அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதுடன், சிறுநீர் கழிக்கும் செயல்பாடு சீராக உள்ளதாகவும், ஆரம்பகட்ட சிக்கல்கள் எதுவும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த மருத்துவ சாதனை, புற்றுநோய், விபத்து அல்லது கடுமையான காயம் காரணமாக ஆணுறுப்பை இழந்தவர்களுக்கு எதிர்காலத்தில் புதிய சிகிச்சை வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் இதுவரை இதுபோன்ற ஐந்து ஆணுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் மட்டுமே பதிவாகியுள்ளன.



