
உலு சிலாங்கூர், ஆகஸ்ட்-4-உலு சிலாங்கூரில் ‘Cikgu Sudha’ எனும் ஆசிரியை ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளிப் பணியாளர்களுக்கான மனநல மற்றும் உளவியல் ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்தக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இச்சம்பவம் குறித்துக் கவலை தெரிவித்துள்ள அமைச்சர் ஃபாட்லீனா சிடேக், ஆசிரியர்களின் மனநலனைக் காப்பது தமக்கு முக்கியமான ஒன்றாகும் எனக் குறிப்பிட்டார்.
இதற்காகச் சுகாதார அமைச்சு, ஆலோசகர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தேவையான உதவிகளை வழங்க அமைச்சு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், ஆசிரியர்கள் ஒருவரையொருவர் நலம் விசாரித்து ஆதரவாக இருக்குமாறு கேட்டுக்கொண்ட அமைச்சர், ஒரு சிறிய அன்பான விசாரிப்பு கூட சக ஊழியருக்குப் பெரிய பலத்தைக் கொடுக்கும் என்றும் சுட்டிக் காட்டினார்.
இந்நிலையில், நடந்த சம்பவம் குறித்த தவறான கதைகளைப் பரப்பாமல், உயிரிழந்த ஆசிரியையின் குடும்பத்தினரின் தனிப்பட்ட உரிமைகளை மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொண்ட அமைச்சர், போலீஸாரின் தீவிர விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
ஃபாட்லீனா முன்னதாக ஆசிரியை சுதாவின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை காலை பள்ளி ஆசிரியை அறையில் மயங்கிக் கிடந்த ‘Cikgu Sudha’ பின்னர் உயிரிழந்து விட்டதாக மருத்துவ அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டது.



