
கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 – KLIA மற்றும் நாட்டின் அனைத்துலக நுழைவுப் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் சோதனைகளை வலுப்படுத்தும் 17 நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் உடனடியாக செயல்படுத்தப்படவுள்ள ஆறு நடவடிக்கைகளில், ஆபத்து உள்ள விமானங்கள், பயணிகள், விமானப் பணியாளர்கள் மற்றும் உடைமைகளுக்கு இலக்கு அடிப்படையிலான சோதனை, விமானப் பணியாளர்களுக்கான கடுமையான பின்னணி ஆய்வு மற்றும் வழக்கமான, திடீர் போதைப்பொருள் பரிசோதனைகள் ஆகியவை உள்ளடங்கும்.
மேலும், KLIA டெர்மினல் 1 மற்றும் 2-ல் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்படும். தேசிய குடிநுழைவு கட்டளை மையம் (NICC) மூலம் பாதுகாப்பு மற்றும் உளவுத் தகவல் பகிர்வும் வலுப்படுத்தப்படும்.
இந்த முடிவு, கடந்த ஜூலை 28ஆம் தேதி ஜகார்த்தாவில் சுமார் 25 கிலோ எடையுள்ள 45 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்களுடன் மலேசிய விமானி ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.



