
கோலாலம்பூர், ஆகஸ்ட்-18,கோலாலம்பூர், Desa Park City-யில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 48 வயது ஆடவர் ஒருவர் கட்டடத்திலிருந்து விழுந்து உயிரிழந்த நிலையில், அவரது மனைவியும் இரு பிள்ளைகளும் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பிற்பகல் 3.32 மணியளவில் ஆடவர் ஒருவர் கட்டடத்திலிருந்து கீழே விழுந்ததாகத் தகவல் கிடைத்ததை அடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ Fadil Marsus தெரிவித்தார்.
தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, வெவ்வேறு அறைகளில் ஆடவரின் 47 வயது மனைவி, 9 வயது மகள் மற்றும் 7 வயது மகன் ஆகியோர் கழுத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.
சம்பவ இடத்திலிருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டத்தின் கீழ் கொலை வழக்காகவும், திடீர் மரணம் எனவும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



