
கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 -நாட்டின் மூத்த முன்னோடித் தலைவர்கள் வகுத்துத் தந்த ஒற்றுமை, புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர மரியாதை என்ற பாதையில் தொடர்ந்து பயணித்து மலேசியாவை மேலும் முன்னேற்றுவோம் என மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் இதனைத் தெரிவித்த அவர், மலேசியாவின் சுதந்திரம் பேச்சுவார்த்தை மற்றும் இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வின் அடிப்படையில் பெறப்பட்ட தனித்துவமான ஒன்று என்றார்.
நாட்டின் பல்லின மக்களின் மொழி, சமயம் மற்றும் கலாச்சார உரிமைகள் அரசியலமைப்பில் பாதுகாக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மலேசியா பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் உலக அரங்கில் வலுவாகத் திகழ்வதற்கு ஒற்றுமை, சகிப்புத்தன்மை மற்றும் ஒருவரையொருவர் மதிக்கும் பண்பே அடித்தளம் என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.
அரசாட்சி, சமயம், இனம் சார்ந்த விவகாரங்களில் கருத்துகளை முன்வைக்கும்போது பொறுப்புடனும் பரஸ்பர மரியாதையுடனும் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், “நமது ஒற்றுமையே வெற்றிக்கான அடையாளம்” என்ற செய்தியுடன் அனைத்து மலேசியர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.



