
பேராக், செப்டம்பர் 6 – குழந்தைகள் மலையேற்றத்தில் பங்கேற்பதற்கான வயது வரம்பு தொடர்பான SOP-ஐ மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையான JBPM பரிந்துரைத்துள்ளது.
JBPM பேராக் இயக்குநர் டத்தோ சயானி சைடோன் (Datuk Sayani Saidon) கூறுகையில், சவாலான மலைப் பாதைகளில் குழந்தைகளுக்கு பெரியவர்களைவிட காயம் ஏற்படும் ஆபத்து அதிகம் என்பதால், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு குறிப்பாக குறைந்த வயதுடையவர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் பங்கேற்பதை கட்டுப்படுத்துவது குறித்து தெளிவான SOP தேவை என்றார்.
இதற்கிடையில், கிளாந்தான் கூணுங் கெராவில் (Gunung Gerah) ஆகஸ்ட் 29ஆம் தேதி மலையேற்றத்தின் போது காணாமல் போன Trans Gerah குழுவைச் சேர்ந்த ஆறு பேரும் நேற்று பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களில் 13 மற்றும் 9 வயதுடைய இரு குழந்தைகளும் உள்ளடங்குவர்.
அந்த ஆறு பேரும் இன்று காலை போஸ் கெமாரிலிருந்து வெளியேற்றப்பட்டு, காலை 10.20 மணிக்கு ஜெட்டி ட்ரோஜனை (Jeti Trojan) வந்தடைந்தனர். அவர்கள் திட்டமிட்டபடி செப்டம்பர் 3ஆம் தேதி காட்டிலிருந்து வெளியேறாததால் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு, குடும்பத்தினர் போலிஸில் புகார் அளித்திருந்தனர்.



