![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-06-Mar-2024-09-34-AM-7078.jpg)
கோலாலம்பூர், மார்ச்-6, AI தொழில்நுட்ப உதவியுடன் தலைவர்களின் வீடியோக்கள் எடிட் செய்யப்பட்டு மேற்கொள்ளப்படும் மோசடிகள் குறித்து, பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தொடர்புத் துறை துணை அமைச்சர் தியோ நீ ச்சிங் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிக இலாபம் பார்க்கலாம் எனக் கூறி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முதலீட்டுத் திட்டமொன்றை விளம்பரம் செய்வது போன்று, AI உதவியுடன் எடிட் செய்யப்பட்ட ஒரு வீடியோ பகிரப்பட்டு வருவது குறித்து அவர் அவ்வாறு சொன்னார்.
அவ்வீடியோவை Meta நிறுவனத்தின் அனைத்துத் தளங்களில் இருந்தும் உடனடியாக நீக்கச் சொல்லி, அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இது போன்ற முதலீட்டுத் திட்ட மோசடிக்குப் பிரதமரின் உருவம் பயன்படுத்தப்படுவதாக தாம் புகார் பெறுவது இது முதன் முறையல்ல என துணை அமைச்சர் சொன்னார்.
“வாருங்கள் வந்து முதலீடு செய்யுங்கள், இலாபம் கொட்டும்” என்றெல்லாம் பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர் பேச மாட்டார் என்பதை சாமானியன் கூட புரிந்துக் கொள்வான். எனவே பொது மக்கள் அது குறித்து அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்” என நீ ச்சிங் நினைவுறுத்தினார்.
AI மூலமாக உருவாக்கப்படும் உள்ளடக்கங்களால் பயனர்கள் எளிதில் ஏமாற்றப்படாமல் இருக்க, அவர்களை எச்சரிக்கும் முறைகளை, Meta, Tik Tok, Google போன்ற நிறுவனங்கள் பரிசீலிக்க வேண்டும் என்றும் துணை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
அவ்விஷயத்தில் தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழி வகைகளை அரசாங்கமும் ஆராய்ந்து வருவதாக அவர் சொன்னார்.