![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-09-Mar-2024-09-09-AM-1677.jpg)
கோலாலம்பூர், மார்ச் 9 – பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார், தேசிய போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ Razaruddin Husain-னுக்கு Proton X90 காரைப் பரிசளித்திருக்கிறார்.
தேசிய அரண்மனையின் முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் உள்ளிட்ட முதன்மை அதிகாரிகள் நால்வருக்கும் அதே ரக கார்களை மாமன்னர் பரிசாக வழங்கியுள்ளார்.
அவர்களின் சிறந்த சேவை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை அங்கீகரிக்கும் வகையில் அக்கார்கள் பரிசளிக்கப்பட்டிருக்கின்றன.
பரிசாக கிடைத்த கார்களுடன் அவர்கள் நிற்கும் புகைப்படங்கள் பேரரரசரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.
இது போல் கார்கள் பரிசாக வழங்கப்படுவது ஜொகூர் அரச குடும்பத்துக்கு ஒன்றும் புதிதல்ல.
ஜொகூர் அரச அறக்கட்டளைகள் வாயிலாக காலங்காலமாக பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாநில அரசு அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள், மருத்துவர்கள், தாதியர்கள் என சேவையில் முதலிடம் வகிக்கும் தரப்பினருக்கு கார்களை பரிசாக வழங்கி சுல்தான் இப்ராஹிம் ஊக்குவித்து வந்துள்ளார்.
2020-ஆம் ஆண்டு கூட, ஜொகூர் பாரு சுல்தானா அமினா மருத்துவமனையின் அரச வார்டில் பணியாற்றிய 10 தாதியர்களுக்கு, Myvi கார்கள் பரிசளிக்கப்பட்டன.
கார்கள் தவிர்த்து, குறைந்த வருமானம் பெறும் மற்றும் ஏழை மக்களுக்கு உதவும் நோக்கில், கடந்தாண்டு பத்தாயிரம் பேருக்கு தலா 10 கிலோ கிராம் இலவச அரிசியை சுல்தான் இப்ராஹிம் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகளின் சேவை மனப்பான்மையை அங்கீகரிப்பதிலும், தேவைப்படும் மக்களுக்கு உதவுவதிலும் மாமன்னனிர் தாராள குணத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.