
கோலாலம்பூர், மே-21-மலேசியாவின் 33-ஆவது அனைத்துலக பிரான்சைஸ் கண்காட்சியான FIM 2026, கோலாலம்பூர் மாநாட்டு மையமான KLCC-யில் இன்று மிக பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது.
மலேசிய பிரான்சைஸ் சங்கத்தின் ஏற்பாட்டில் 3 நாட்களுக்கு நடைபெறும் இம்மாபெரும் வணிகக் கண்காட்சியில், 25,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
இம்முறை ஸ்பெயின், தைவான், இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து உலகளாவிய நிறுவனங்களின் பங்களிப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 விழுக்காடு அதிகரித்துள்ளது.
துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி சார்பாக, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் அலி அதனைத் தொடக்கி வைத்தார்.
அவரின் தொடக்க உரையில், மலேசியாவை இவ்வட்டாரத்தின் முதன்மை பிரான்சைஸ் மையமாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் ரிங்கிட் விற்பனை மைல்கல்லை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மலேசியாவின் ‘Global Art ஆர்ட்’ மற்றும் ‘Marrybrown’ போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் அனைத்துலகச் சந்தையில் முத்திரை பதித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய இவ்விழாவில், MyIPO அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டதோடு, புதிய TVET தொழிற்கல்வி பயிற்சித் திட்டமும் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டது.
புதியத் தொழில்முனைவோருக்கும் முதலீட்டாளர்களுக்கும் சிறந்த வர்த்தக வாய்ப்புகளை வழங்கும் இக்கண்காட்சி, வரும் மே 23-ஆம் தேதி வரை நடைபெறும்.



