
அலோர் ஸ்டார், ஆகஸ்ட்-5,மலாய் சமூகத்தினர் மற்றும் _Tanah Melayu_ தொடர்பான தமது பேச்சைத் தவறாக சித்தரித்ததாகக் கூறி, பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குனர் டத்தோ ஸ்ரீ சனூசி நோர் பல அரசியல் தலைவர்களுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
DAP துணைத் தலைவர் ஙா கோர் மிங், முன்னாள் ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் மரினா இப்ராஹிம் (Marina Ibrahim) மற்றும் சலீம் அப்துல் ரஹ்மான் ஆகிய மூவருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதை, கெடா மந்திரி பெசாருமானா சனுசி உறுதிப்படுத்தினார்.
அண்மையை நெகிரி செம்பிலான் தேர்தல் பிரச்சாரத்தின் போது, _”மலேசியாவில் உள்ள பிற இனத்தவர்களுக்கு பூர்வீகத் தாயகம் உள்ளது, ஆனால் மலாய்க்காரர்களுக்கு மலேசியா மட்டுமே உள்ளது”_ என அவர் பேசியிருந்தார்.
இது இந்திய – சீன சமூகங்களின் விசுவாசத்தைக் கேள்வி எழுப்புவதாகக் கூறி பரவலாக கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் அவர் மீது போலீஸ் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலமும் பதிவுச் செய்யப்பட்டது.
எனினும், தாம் மற்ற இனத்தவர்களின் குடியுரிமை உரிமைகளைக் கேள்வி கேட்கவில்லை என்றும், தனது பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாகவும் சனுசி கூறியுள்ளார்.
எனவே, வழக்கறிஞர் நோட்டீஸ் பெற்றவர்கள் 7 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஙா கோர் மிங் அல்லது மரினா இப்ராஹிம் ஆகிய இருவரும் இதுவரை கருத்துரைக்கவில்லை.



