![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-27-Mar-2024-04-50-PM-5260.jpg)
கோலாலம்பூர், மார்ச்-27,மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC உண்மையில் குறி வைத்திருப்பது தங்கள் தந்தையைத் தான் என, துன் டாக்டர் மகாதீரின் இரு மூத்த மகன்கள் கூறியிருப்பது குறித்து தாம் பின்னர் கருத்துரைப்பதாக, MACC தலைவர் கூறியிருக்கின்றார்.
அவர்கள் என்ன சொன்னார்கள், எந்த அர்த்தத்தோடு சொன்னார்கள் என்பதை தாம் முதலில் நன்கு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருப்பதாக Tan Sri Azam Baki தெரிவித்தார்.
சொத்துக்களை அறிவிக்கக் கோரும் விவகாரத்தில் தாங்கள் இருவரும் உண்மையில் வெறும் சாட்சிகள் மட்டுமே; முக்கிய ‘சந்தேக நபரே’ தங்களின் தந்தை மகாதீர் தான் என, Mirzan-னும் Mokhzani-யும் அண்மைய பேட்டியொன்றில் கூறியிருந்தனர்.
அதாவது மகாதீரை சிக்க வைப்பதே MACC-யின் குறிக்கோள் என்ற தோரணையில் அவர்கள் பேசியிருந்தனர்.
மகாதீருக்கு எதிரான விசாரணை அம்சங்கள் குறித்தும் தங்களுக்கு MACC விவரம் எதனையும் தரவில்லை என அவ்விருவரும் கூறிக்கொண்டனர்.
மகாதீர் பிரதமரான வருடமான 1981-ஆம் ஆண்டில் இருந்து தாங்கள் குவித்த சொத்துக்களின் விவரங்களை அறிவிக்குமாறு Mirzan-னையும் Mokhzani-யையும் கடந்த ஜனவரியில் MACC உத்தரவிட்டது.
அவ்வாறு செய்ய முதலில் 30 நாட்கள் காலக்கெடு விதித்த MACC பின்னர் அதனை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.