
புத்ராஜெயா, ஆகஸ்ட்-7-சமூகப் பாதுகாப்பு நிறுவனமான PERKESO-வின் ‘Daya Kerjaya 2.0’ திட்டத்தில், சுமார் 45 மில்லியன் ரிங்கிட் போலிக் கோரிக்கை சமர்ப்பித்த விவகாரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படவுள்ளதாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC அறிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள், முன்னாள் கைதிகள் மற்றும் மூத்த குடிமக்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதோடு, அவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு, ஒரு பணியாளருக்கு மாதம் 1,500 ரிங்கிட் வீதம் 6 மாதங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையையே, முகவர்களும் நிறுவன உரிமையாளர்களும் முறைகேடாகப் பெற்றுள்ளது MACC விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுவரை கோலாலம்பூர், பினாங்கு, பேராக், சபா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 29 சந்தேக நபர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து விசாரணை ஆவணங்களும் அரசு வழக்கறிஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த போலி உரிமைக் கோரல் மோசடி தொடர்பாக இந்த மாதம் முழுவதும் கூடுதல் கைதுகளும் நீதிமன்ற நடவடிக்கைகளும் தொடரும் என MACC தெரிவித்துள்ளது.



