
கோலாலம்பூர், செப்டம்பர்-1 – ஏழே நாட்களில் 9 மலைகளேறி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியில் பேராக்கைச் சேர்ந்த இளைஞர் Loga Chandran வெற்றிப் பெற்றுள்ளார்.
ஜோகூர் Gunung Ledangகில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி தொடங்கிய இவரின் சாதனை முயற்சி, நேற்று பேராக் – கெடா எல்லையில் உள்ள Gunung Kerunai மலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்த சவாலான முயற்சி தேசிய தினத்தன்று நிறைவடைந்தது சரியானதோர் இறுதி அத்தியாயத்தை வழங்கியதாக, Loga Chandran மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.
கடைசி நாளில் Naresh, Shaanaran, Tharmish, Maateesh, Saatiysh, Jeychandran, Harishchandran, Uthayachanran ஆகிய தனது குழுவினரோடு தந்தை ராமசந்திரனும் இணைந்ததால் அது இன்னும் அர்த்தமுள்ளதாக மாறியதாக அவர் சொன்னார்.
அதோடு தொடக்கம் முதல், இறுதி வரை வணக்கம் மலேசியா ஊடகம் தனக்கு பெரும் ஆதரவு வழங்கி, தன்னுடைய இந்த முயற்சி உலகம் அறிய தொடர்ந்து 7 நாட்களும் செய்தி வெளியிட்டது தனக்கு அங்கீகாரத்தை வழங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த 7 நாட்கள் பயணம் வெற்றியில் முடிந்திருப்பதை அடுத்து வரும் வியாழக்கிழமை மலேசிய சாதனை புத்தகத்தின் அங்கீகாரத்தைத் தாம் பெறவிருக்கும் தகவலையும் அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
இந்தச் சாதனை தன்னுடையது மட்டுமல்ல, தனது குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள் மற்றும் முதல் நாள் முதல் இன்று வரை அவருக்குப் பின்னால் நின்ற அனைத்து மலேசியர்களுக்கும் சொந்தமானது என Loga Chandran வருணித்தார்.
விடாமுயற்சியும் மனம்தளராமையும் இருந்தால் ஒருவர் எந்த எல்லையையும் தொடலாம் என்பதற்கு இந்த இளைஞரே ஓர் எடுத்துக்காட்டு.