கோலாலம்பூர், டிச 4- குடிநீர் விநியோகம் தொடர்பான பிரச்னையை அல்லது நெருக்கடியை தீர்ப்பதில் (SPAN) எனப்படும் தேசிய நீர்ச் சேவை ஆணையம் சமரச தரப்பாக செயல்படும் என அந்த ஆணையத்தின் தலைவர் சார்ல்ஸ் சன்டியாகோ தெரிவித்திருக்கிறார். அண்மையில் நீர் பிரச்சனைக்கு உள்ளாகியிருந்த லங்காவி மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட சந்திப்பு நடவடிக்கை நல்ல பயனைத் தந்தது. நீர் பிரச்னைக்கு உள்ளாகும் பகுதிகளில் உள்ள மக்களிடையே இத்தகைய சந்திப்பு தொடர்ந்து நடத்தப்படும் என அவர் கூறினார் . பொதுவாக தேசிய நீர்ச் சேவை ஆணையம் குடிநீர் நிறுவனங்களின் கட்டுப்பாட்டாளராக இருந்தாலும் அடிப்படை உரிமையாக கருதப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெறுவதற்கான மக்களின் புகார்களை கவனித்து அற்கு தீர்வுகாண வேண்டிய கடப்பாடு இருப்பதையும் சார்ல்ஸ் சன்டியாகோ சுட்டிக்காட்டினார்.
பயனீட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை தீர்ப்பதில் சமரச தரப்பாக செயல்படும் நோக்கத்தை தேசிய நீர்ச் சேவை ஆணையம் கொண்டிருப்பதாக க அவர் கூறினார். பாதிக்கப்பட்ட பயனீட்டாளர்கள், நீர் வழங்கும் சேவை நிறுவனத்தினர் மற்றும் தேசிய நீர் சேவை ஆணையத்துடன் பேச்சுக்களை நடத்தும் தலையிடு கொள்கையாகவும் இந்த நோக்கம் இருக்கும் என சார்ல்ஸ் சன்டியாகோ தெரிவித்தார்.