மெர்சிங் டிச 20 – ஜோகூரில் ஜாலான் மெர்சிங்கில், ஒரு காரும் 10 டன் லோரியும் சம்பந்தப்பட்ட கோர விபத்தில், தாயும் அவரது மகனான 4 வயது சிறுவனும் உயிரிழந்தனர். பெரோடுவா விவா காரை ஓட்டிச் சென்ற 33 வயது சுபைடா ஸகாரியா என்ற பெண்ணும் அவரது மகன் உவைஸ் ரய்யான் முகமட்டும் மரணம் அடைந்தனர். இன்று காலை மணி 7.37 அளவில் இந்த விபத்து குறித்த தகவலை பெற்றதாக ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த மெர்சிங் மற்றும் எண்டாவ் தீயணையப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த குழுவினர் காரில் சிக்கிக் கொண்ட இருவரையும் சிறப்பு கருவியை பயன்படுத்தி மீட்டனர். கடுமையான காயத்திற்குள்ள அந்த பெண்ணும் அவரது மகனும் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்ததாக கூறப்பட்டது.