புத்ரா ஜெயா, மே 23 – நாடு முழுவதுமுள்ள சிறு வியாபாரிகளுக்கு உதவும் திட்டம் குறித்து, மலேசிய சீன சங்கம் அளித்த அறிக்கையைத் தொடர்ந்து, வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சு (KPKT), மைகியோஸ்க் திட்டம் தொடர்பான ஆவணங்களை உள்ளாட்சித் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ முகமட் ஃபட்ஸ்லி முகமட் கெனாலி (Datuk Mohd Fadzli Mohd Kenali) தலைமையிலான அதிகாரிகள் குழு, மலேசிய ஊழல் தடுப்பு நிறுவனத்திடம் தானாக முன்வந்து சமர்ப்பித்துள்ளது.
250 மில்லியன் மதிப்பிலான மைகியோஸ்க் திட்டத்தைச் செயல்படுத்துவதில் முறைகேடுகள் நடந்ததாகவும், அது தொடர்பான விசாரணையை, மலேசிய ஊழல் நிறுவனம் மேற்கொள்ள வேண்டுமென சிலாங்கூர் மலேசிய சீன இளைஞர் சங்கத்தினர் (MCA) கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சிறு வியாபாரிகளுக்குப் பயனளிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த ‘மைகியோஸ்க்’ திட்டத்தில் முறைகேடுகள் துளியும் இல்லை என்பதையும், செலவீனங்கள் அனைத்திற்கும் தகுந்த ஆதாரங்கள் இருப்பதையும் நிரூபிப்பதற்காவே ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதென டத்தோ முகமட் ஃபட்ஸ்லி உறுதியாக கூறியுள்ளார்.
தொடர்ந்து, தவறான அறிக்கையை வெளியிடும் அல்லது மலேசிய ஊழல் தடுப்பு அதிகாரிகளைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் செயல்படும் எந்தவொரு தரப்பினருக்கும் 100,000 ரிங்கிட்டுக்கு மிகாமல் அபராதம் அல்லது 10 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.