கோலாலம்பூர், மார்ச் 7 – எதிரே வரும் கார் மீது, ஆடவன் ஒருவன் செந்தமாக சென்று விழுந்து, விபத்துக்குள்ளானதை போல பாவனை செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி இணையப் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வீடியோவை, சம்பந்தப்பட்ட காரின் உரிமையாளரே, DashCam Owners Malaysia Facebook எனும் முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அந்த ஆறு வினாடி காணொளியில், சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரான பைருல் காலிட் என்பவர், சாலை சமிக்ஞை விளக்கை கடந்து செல்கிறார்.
அப்பொழுது, சாலையோரத்தில் நடந்து சென்றுக் கொண்டிருக்கும் நபர் ஒருவர், திடீரென பைருலின் காரின் முன் வந்து விழும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அந்நபரை, இன்னும் கொஞ்சம் தான் பைருலின் கார் மோதித் தள்ளி இருக்கும்.
சம்பவத்தின் போது, “எனக்கு இரத்தம் உரைத்து போனதை போல ஆகிவிட்டது” என பைருல் அந்த பதிவின் கீழ் தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், அச்சம்பவம் குறித்து இணையப் பயனர்கள் பலர் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வெளிநாடுகளில் நடப்பதை போல, காப்புறுதி தொகையை பெறுவதற்காக அந்நபர் அவ்வாறு செய்திருக்கலாம் என அதில் ஒருவர் பதிவிட்டுள்ள வேளை ;
“அவர் உங்களை மோசடியில் சிக்க வைக்க முயன்று இருக்கலாம். எனினும், டேஷ்கேம் பதிவை பார்த்த பின்னர் அது நடக்கவில்லை” என மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.