
கோலாலாம்பூர், ஜூன்-4 – நீதிமன்ற வழக்குகளிலிருந்து நாட்டின் பிரதமர் விலக்குப் பெற முடியுமா என்பது உள்ளிட்ட 8 கேள்விகளுக்கு கூட்டரசு நீதிமன்றத்திடம் பதில் கோரும் முயற்சியில், டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தோல்வி கண்டுள்ளார்.
அவரின் விண்ணப்பத்தை கோலாலாம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 39, 40 மற்றும் 43-ஆவது பிரிவுகளின் கீழ், பதவியில் இருக்கும் ஒரு பிரதமர் தனது நியமனத்திற்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் தனிப்பட்ட நடத்தை தொடர்பான வழக்கிலிருந்து விலக்குரிமையைப் பெறுகிறாரா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு, அன்வார் முன்னதாக கூட்டரசு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
தமது முன்னாள் உதவியாளரான முஹமட் யூசோஃப் ராவுத்தர் தாக்கல் செய்த சிவில் வழக்கு தொடர்பில், டத்தோ ஸ்ரீ அன்வார் அக்கேள்விகளைக் கேட்டிருந்தார்.
எனினும், அக்கேள்விகள் கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய சர்ச்சையின் வரம்பை பூர்த்தி செய்யவில்லை என்பதை சுட்டிக் காட்டி, நீதிபதி ரோஸ் மாவார் ரோசாய்ன் அன்வாரின் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து, ஜூன் 16-ஆம் தேதி முஹமட் யூசோஃப் ராவுத்தரின் வழக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி தொடருமென என நீதிபதி அறிவித்தார்.
இந்த வழக்கு, பிரதமர் என்ற வகையில் நிர்வாகக் கடமைகளைச் செய்யும் தனது திறனைப் பாதிக்குமா ? அல்லது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப் பிரிப்புக் கொள்கையை குறைத்து மதிப்பிடுமா ? என்பதையும் முடிவு செய்யுமாறு அன்வார் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்.