குவாலா பீலா, ஜனவரி 12 – நெகிரி செம்பிலான், குவாலா பீலாவிலுள்ள, கம்போங் கெபிஸில், கதவை தட்டி தொந்தரவு செய்யும் மர்ம சம்பவங்கள் நீடிக்கின்றன.
ஆகக் கடைசியாக, கடந்த புதன்கிழமை, மனிதனை ஒத்திருக்கும் கருப்பு உருவம் ஒன்றை கண்டதாக, குடியிருப்பாளர்கள் சிலர் கூறியுள்ளனர்.
இரவு மணி 9.40 வாக்கில், வீட்டிற்கு பின்னால் நின்றுக் கொண்டிருந்த போது, கண்ணில் தென்பட்ட அந்த உருவம், சில நொடிகளில் ஓடி மறைந்ததாக, 54 வயது ஹஸ்லிண்டா ஹசிம் எனும் பெண் ஒருவர் கூறியுள்ளார்.
அன்றைய நாள் இரவு முழுவதும், விடியும் வரையில், வீட்டிற்கு வெளியே மர்ம சத்தங்களும், அந்த மர்ம உருவம் சுவரை சுரண்டுவதை போன்ற சத்தங்களும் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்ததாகவும் ஹஸ்லிண்டா தெரிவித்தார்.
இந்நிலையில், தனது மகன் அந்த உருவத்தை நேருக்கு நேர் பார்க்க நேர்ந்ததாக, 67 வயது மரியாம் ஜோயிட் கூறியுள்ளார்.
எனினும், துரத்திச் செல்வதற்குள் அது காணாமல் போய்விட்டதாகவும் அவர் சொன்னார்.
அன்றிரவு முழுவதும் சுமார் ஐந்து முறை அந்த உருவம் கதவை தட்டி தொந்தரவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிலையில், திரைச்சீலையை விலக்கிப் பார்த்த போது, அந்த உருவம் சரியாக வீட்டு வாசலில் நின்றுக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்து போனதாக, மற்றொரு நபர் தெரிவித்தார்.
அந்த மர்ம உருவத்தாலும், நீடிக்கும் சத்தத்தாலும், கம்பத்து மக்கள் அச்சத்தில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள வேளை ; அதற்கு உடனடியாக தீர்வுக் காணப்பட வேண்டுமென, கம்போங் கெபிஸ் கிராமத் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.