
சுபாங் ஜெயா, ஜூன் 4 – ஷா அலாம் கெசாஸ் நெடுஞ்சாலையின் 35.8 ஆவது கிலோமீட்டரில் விரைவு பஸ் ஒன்று சாலையின் இரும்பு
தடுப்பில் மோதி கவிழ்ந்ததில் அதிலிருந்த 12 பயணிகள்
பயங்கரமான சூழ்நிலையை எதிர்நோக்கினர். நேற்றிவு மணி 9.30 அளவில் ஷா அலாம் செக்சன் 17 பஸ் முனையத்திலிருந்து ஜோகூர்
பாசீர் கூடாங்கிற்கு சென்று கொண்டிருந்த விரைவு பஸ் இந்த விபத்திற்கு உள்ளானது.
சாலையின் வலது புறத்திலிருந்து வாகனம் ஒன்று பஸ்சை முந்திச் சென்ற திடீர் நடவடிக்கையால் பஸ் ஒட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இரும்பு தடுப்பில் மோதியதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் வான் அஸ்லான் வான் மாமாட் ( Wan Azlan Wan Mamat ) தெரிவித்தார். இந்த சம்பவத்தில் பயணி ஒருவர் சொற்ப காயத்திற்கு உள்ளானார். இந்த விபத்திற்கு காரணமான வாகனத்தை கண்டறிவது மற்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வான் அஸ்லான் கூறினார்.