![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-09-May-2024-06-46-PM-6192.jpg)
கோலாலம்பூர், மே 9 – வெளிநாட்டு தொழிலாளர்களை அதிகம் சார்ந்திருக்கும் நிறுவனங்கள் விரைவில் அவர்களுக்காக அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என கூறியுள்ளார் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்.
நாட்டில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை அமல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார்.
நிறுவனங்களில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பல அடுக்கு வரி விதிப்பு முறை தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் விவரித்தார்.
இவ்வாண்டு இந்த முறையை அமைச்சரவையில் முன்வைப்பதே தன்னுடைய இலக்கு என கூறிய அவர் இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டுக்குள் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இன்றைய செய்தியாளர்களின் சந்திப்பில் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த பல அடுக்கு வரியிலிருந்து கிடைக்கும் வருமானம் உள்ளூர் தொழிலாளர்கள், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சார்ந்தவர்களை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் என்றார்.
இந்நிலையில், இந்த வரிவிதிப்பு முறையானது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சார்ந்திருப்பதை குறைத்து, உள்ளூர் தொழிலாளர்களுக்குப் பயற்சி அளிக்க நிறுவனங்களை ஊக்குவிக்கவும், உள்ளூர் தொழிலாளர்கள் உயர் திறமையான வேலைகளை மேற்கொள்ளவும் உதவும் எனக் கூறினார்.
அடுத்த ஆண்டுக்குள் நாட்டில் 2.4 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்களை இலக்காக கொண்டிருக்கும் நிலையில், கடந்த 15 ஆம் பிப்ரவரி வரை உள்துறை அமைச்சகத்தின் பதிவுகளின் அடிப்படையில், மலேசியாவில் சுமார் 2.12 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்கள் உள்ளனர் என்றார் அவர்.
பெர்னாமா தலைவர் டத்தோ ஶ்ரீ Wong Chun Wai-யின் ஏற்பாட்டிலான Concorde Club எனப்படும் நாட்டின் முன்னணி ஊடக ஆசிரியர்கள் குழுவிடன் நடந்த கலந்துரையாடலில் இன்று ஸ்டீவன் சிம் பேசினார்.