
கோலாலாம்பூர், ஜூன்-6 – மலாய்க்காரர்களை ஒரு புதியக் ‘குடையின்’ கீழ் ஒன்றிணைக்க துன் Dr மகாதீர் மொஹமட் எடுத்துள்ள முயற்சியை, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக் கட்சியான MIPP தற்காத்துள்ளது.
மலாய்க்காரர்களின் ஒற்றுமைக்காக விடுக்கப்படும் அழைப்பு அது; அதையேன் நீங்கள் ஓர் அச்சுறுத்தலாகப் பார்க்கிறீர்கள் என, MIPP தலைவர் SP புனிதன் கேட்டார்.
ஒற்றுமையே அரசியல் நிலைத்தன்மையின் அடிப்படையாகும்; ஆக இந்த முன்மொழிவு பன்முகத்தன்மையையோ அல்லது ஜனநாயகத்தையோ நிராகரிப்பதல்ல என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
“எந்தவொரு பல்லின தேசமும் அமைதியையும் செழிப்பையும் அடைய, அதன் பெரும்பான்மை சமூகத்திற்குள் ஒற்றுமை அவசியம்” என்றார் அவர்.
அதே போல், மலேசிய இந்தியர்களை ஒரே அரசியல் தளத்தின் கீழ் ஒன்றிணைப்பதே MIPP-யின் பொறுப்பு என்றும், மற்றவர்களை எதிர்ப்பது அல்ல என்றும் புனிதன் தெளிவுப்படுத்தினார்.
“எங்களின் நோக்கம் பிரிவினையைப் பற்றியது அல்ல; மாறாக ஒன்றுபட்ட இந்தியக் குரல் மூலம் வலுவான மலேசியாவை உருவாக்குவது பற்றியது”என இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறினார்.
அரசாங்கத்தில் ‘மலாய்க்காரர்களின் அதிகாரத்தை மீட்டெடுப்போம்’ எனக் கூறி, அதற்காக ‘மலாய்க்காரர்களின் செயலகம்’ (Sekretariat Orang Melayu) என்ற பெயரில் புதிய கூட்டமைப்பை மகாதீர் உருவாக்கியுள்ளார்.
அம்னோ உறுப்பினர்கள் உட்பட அனைத்து மலாய்க்காரர்களையும் அப்புதியக் ‘குடையின்’ கீழ் இணைய தாம் வரவேற்பதாகவும், அந்த முன்னாள் பிரதமர் கூறியிருப்பது தற்போது பேச்சுப் பொருளாகியுள்ளது.