
கெரிக், மே-21 – கெரிக் – ஜெலி நெடுஞ்சாலை அருகே நேற்றிரவு காட்டு யானைக் கூட்டம் ஆவேசத் தாக்குதல் நடத்தியதில் வாகனமொன்று கடுமையாக சேதமுற்றது.
இரவு 8 மணிக்கு மேல் நிகழ்ந்த அச்சம்பவத்தை, வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN உறுதிப்படுத்தியது.
தந்தமில்லா ஓர் ஆண் யானை உள்ளிட்ட 6 யானைகள் அத்தாக்குதலில் ஈடுபட்டன.
பாதிக்கப்பட்ட காரோட்டி எப்படியோ யானைகளை விரட்டி விட்டு பின்னர் கெரிக் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
சம்பவ வீடியோ நேற்றிரவு முதல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அதில் வெள்ளை நிற செடான் காரின் முன்பகுதியும் பின்பகுதியும் யானைகள் மிதித்ததால் நொறுங்கி போயிருப்பதை காண முடிகிறது.
இதே கெரிக் சாலையில் தான் இரு வாரங்களுக்கு முன் குட்டி யானை டிரேய்லரில் அடி பட்டு இறந்துபோய், வேதனையில் தாய் யானை மணிக்கணக்கில் அவ்விடத்தை விட்டு நகராமல் இருந்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது